ஹரிஓம் வாழ்க மஹாதேவ்.
இந்த சபலா ஏகாதசி,
(டிசம்பர் 15 2025 ) தேய்பிறையில் தோன்றுகிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.
மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார்.
ஓ! கிருஷ்ணா,
தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் அதனை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பதை எனக்கு விவரமாகக் கூறுங்கள்.
பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார்.
பரத வம்சத்தில் சிறந்தோனே. பாம்புகளின் ஆதிசேஷன் எவ்வாறு சிறந்ததோ, பறவைகளில் கருடன் எவ்வாறு சிறந்ததோ, யாகங்களில் எவ்வாறு அஸ்வமேத யாகம் சிறந்ததோ, ஆறுகளில் கங்கை எவ்வாறு சிறந்ததோ, அனைத்து தேவர்களிலும் விஷ்ணு எவ்வாறு சிறந்தவரோ, மற்றும் மனிதர்களில் அந்தணர்கள் எவ்வாறு சிறந்தவர்களோ, அவ்வாறே அனைத்து விரதங்களிலும் ஏகாதசி விரதம் மிகச் சிறந்தது. ஓ, மன்னர்களில் சிறந்தோனே. யாரொருவர் ஏகாதசியை அனுஷ்டிக்கிறாரோ, அவர் எனக்கு மிகவும் பிரியமானவர். ஐந்தாயிரம் ஆண்டுகள் தவம் மேற்கொள்வதால் அடையும் புண்ணிய பலனை ஒருவர் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலாயே எளிதில் அடைவார்.
முன்பு ஒரு காலத்தில் மஹிஸ்மதா என்ற ஒரு புகழ் பெற்ற மன்னர் சம்பவதி என்ற நகரில் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்த மகனான லும்பகா, பெரும்பாவியாக இருந்தான். அவன் அந்தணர்களையும், வைணவர்களையும், தேவர்களையும் நிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் சூதாட்டத்திலும் விபச்சாரத்திலும் அதிக அளவில் ஈடுபட்டிருந்தான். அதனால் தன் தந்தையான மஹிஸ்மதா மன்னர் அவனை நாட்டைவிட்டு வெளியேற்றினார்.
வெளியேற்றப்பட்ட லும்பகா காட்டில் வாழ்ந்தான். இரவு நேரங்களில் தன் தந்தையின் நாட்டு பிரஜைகளிடம் செல்வத்தை அபகரிக்கத் துவங்கினான். அவன் திருடுவதில் ஈடுபட்டிருப்பினும் தங்கள் மன்னனின் மகன் என்பதால் அந்நாட்டு மக்கள் அவனை தண்டிக்கவில்லை. லும்பகா பச்சையான இறைச்சி மற்றும் பழங்களை உண்டு தன் வாழ்க்கையை கழித்தான்.
அக்காட்டில் தேவர்களுக்கு ஈடாக வணங்கத்தக்க ஒரு ஆலமரம் இருந்தது. லும்பகா சில நாட்கள் அம்மரத்தடியில் வாழ்ந்தான். லும்பகா இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கையில் தற்செயலாக இந்த சபலா ஏகாதசி நிகழ்ந்தது.
லும்பகா மெலிந்து மிகவும் சோர்வடைந்தான். ஏகாதசியின் முன்தினத்தன்று உணர்விழந்தான். ஏகாதசியன்று நடுப்பகலில் மீண்டும் உணர்வு பெற்றான். மிகுந்த பசியால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்ததால், அன்றைய தினம் லும்பகாவால் எந்த ஒரு விலங்கையும் கொல்லமுடியவில்லை. அதனால் சில பழங்களை சேகரித்து அவற்றை பகவான் விஷ்ணுவிற்கு சமர்ப்பித்தான். அந்நேரம் சூரியனும் மறைந்தது லும்பகா அன்று இரவு முழுவதும் விழித்திருந்தான்.
உண்ணாவிரதம் இருந்து, இரவு விழித்திருந்ததால் லும்பகா தன்னையறியாமலே சபலா ஏகாதசியை அனுஷ்டித்தான். லும்பகாவின் இந்த ஏகாதசி விரதத்தை பகவான் மதுசூதனர் ஏற்றுக்கொண்டார். இந்த ஏகாதசியை அனுஷ்டித்ததன் விளைவாக லும்பகா ஒரு செல்வம் மிக்க நாட்டைப் பெற்றார். மறுநாள் காலையில் ஒரு தெய்வீகக் குதிரையும் பகாவின் முன்தோன்றியது. அவ்வேளையில் வானத்திலிருந்து ஒரு ஓசை வந்தது. ஓ! இளவரசனே, பகவான் மதுசூதனரின் கருணையாலும், சபலா ஏகாதசியை அனுஷ்டித்ததன் பலனாகவும் நீ ஒரு இராஜ்ஜியத்தைப் பெறுவாய்.
நீ எந்தவொரு சிரமுமின்றி அதனை ஆள்வாய். உன் தந்தையிடம் திரும்பிச் சென்று இராஜ்ஜியத்தை அனுபவிப்பாயாக, இந்த அறிவுரைக் கேற்ப லும்பகா தன் தந்தையிடம் திரும்பிச் சென்று நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அதன் பிறகு லும்பகா அழகிய மனைவியையும் நல்ல மகன்களையும் பெற்றார். இவ்வாறாக லும்பகா மகிழ்ச்சியுடன் நாட்டை ஆண்டு வந்தார். சபலா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் ஒருவர் இப்பிறவியில் புகழ் அடைந்து, அடுத்த பிறவியில் முக்தி அடைவார். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் அஸ்வமேத யாகத்தின் பலனை அடைவார்
விரதங்களில் அதிமுக்கியமானது “ஏகாதசி” விரதம் ஆகும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. வேதசாஸ்திரங்கள்ம் “ஏகாதசி”, “கிருஷ்ணரின் திருநாள்” என்று குறிப்பிடுகிறது. மேலும் ஏகாதசி விரதத்தினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
ஏகாதசி என்றால் என்ன?
சம்ஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி வரும். அதாவது, அமாவாசையிலிருந்து 11 வது நாளையும், பௌர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு எள்களிலும் ஏகாதசி விரதத்தை டபிடிக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் ஏன் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்?
பொதுவாக விரதங்கள், கடைபிடித்தால் நல்ல பலங்கள் கிடைக்கும். கடைபிடிக்காவிட்டால் எந்த அபாயமும் கிடையாது. ஆனால் ஏகாதசி விரதம் எப்படியென்றால், இந்த விரதத்தை கடைபிடிக்கவில்லை என்றால் பாவங்கள் வந்து சேரும். அதே சமயம் ஏகாதசி விரதம் இருந்தால் மற்றெல்லா விரதங்களின் பலனையும் அடையலாம். ஆனால் மற்றெல்லா விரதங்களை கடைபிடித்தாலும் ஏகாதசி விரதத்தின் பலனை அடைய இயலாது.
ஏகாதசி விரதம் இருப்பது எப்படி ?
ஏகாதசி விரதத்தின் மிக முக்கியமான அங்கம் தானியங்களால் ஆன உணவை எல்லாவகையிலும் உண்ணாமல் இருப்பதேயாகும்.
குறிப்பாக அரிசி, சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்ட அனைத்து பலகாரங்களையும் உண்ணக் கூடாது. நவ தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளும், பருப்பு வகைகளும், பயறு வகைகளும் (கடுகு உளுந்தம் பருப்பு தாளித்துக் கொட்டுதல் உட்பட) ஏகாதசி அன்று முற்றிலும் விலக்கப்பட வேண்டும்.
காய்கறிகளில் மொச்சை, பீன்ஸ், அவரை போன்ற பயறு வகைகளைச் சோர்ந்த காய்களும் விலக்கப்பட வேண்டும்..
சமையல் எண்ணெய் வகையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சுத்தமான பசு நெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவை மட்டும் சேர்க்கலாம். மற்றெல்லா எண்ணெய் வகைகளும் விலக்கப்பட வேண்டும். இத்தனை கவனம் தேவைப்படுவதால் முதல் தர பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் ஏகாதசி விரதம் கடைபிடிப்பார்கள். அது முடியாதவர்கள் துளசி தீர்த்தம் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பார் அதுவும் முடியாதவர்கள் பசும்பால், தயிர், பழங்கள் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் பயறு வகைகள் அல்லாத காய்கறிகளச் சேர்த்துக் கொள்வர்.
ஏகாதசி விரதம் ஆரம்பிப்பதும், முடிப்பதும் எவ்வாறு?
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை சூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம்.
அதே போல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டிகளில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். மற்றவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்தியமாக செய்யப்பட்ட தானிய உணவை (சாதம், பொங்கல் ஏதேனும் ஒன்றை) உட்கொண்டு முடிக்க வேண்டும். ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பது எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதாகும். ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி நாள் மற்றும் விரதம் முடிக்க வேண்டிய நேரம் குறித்த காலண்டர்
உள்ளது.
ஏகாதசி அன்று செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்ன?
ஏகாதசி முழுவதும் பகவானின் நாமம் சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரக மந்திரமான “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே”
எனும் மஹாமந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பது மிகவும் சிறந்தது. ஏகாதசி அன்று அவசியம் கோயிலுக்குச் சென்று ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும். ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை நூல்களை படிப்பதும், கேட்பதும் மிகவும் நல்லது.
ஏகாதசி அன்று சினிமா செல்வதோ, பரமபதம் ஆடுவதோ, வீண் பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது வீணாக உறங்குவதோ விரதத்திற்கு சற்றும் உதவாது. தவிர, திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது.


