மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) சமீபத்தில் விமானங்களுக்கு ஓய்வு அளிப்பது தொடர்பான புதிய விதிகளை அமல்படுத்தியது. இந்த புதிய விதிகளின் காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தில் போதிய விமானிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் விளைவாக, கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த திடீர் நெருக்கடியால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையான சிரமத்திற்கும் அவதிக்கும் ஆளாகினர். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விமானச் சேவைகள் ரத்தானதால் டிமாண்ட் அதிகரித்து, விமான டிக்கெட்டுகளின் கட்டணம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதைக் கட்டுப்படுத்திய மத்திய அரசு புதிய கட்டண உச்சவரம்புகளை நிர்ணயித்து உத்தரவிட்டது. அத்துடன், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை உடனடியாகத் திரும்பிக் கொடுத்துத் தீர்வு காணுமாறு இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, நேற்று வரை சுமார் ரூ.610 கோடி ரூபாய் மதிப்பிலான டிக்கெட் கட்டணத் தொகை பயணிகளுக்குத் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தங்களின் சேவை நிலை சுமார் 75 சதவீதத்தை எட்டியுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் முழு இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்படும் எனவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த நெருக்கடியான சூழலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தற்போது நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


