சுயவேலைவாய்ப்பு மூலம் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் தமிழக அரசு இலவச தையல் இயந்திர திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்தின் கீழ் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், பொருளதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள், முன்னாள் படைவீரரின் மனைவி ஆகியோர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
தனி நபரும் விண்ணப்பிக்கலாம். அல்லது 10 பெண்கள் சேர்ந்து ஒரு குழுவாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அவர்களுக்கு 6 தையல் இயந்திரம் வழங்கப்படும். இதனுடன் ஒரு கட்டிங் மெஷின், ஓவர்லாக் மெஷின் என முழு சாதனங்களும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
என்னென்ன தகுதிகள்?
இலவச தையல் இயந்திர பெற விரும்பும் பெண்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.72,000 ஆக இருக்க வேண்டும். வயது பொறுத்தவரை, பெண்கள் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்களுக்கு தையல் இயந்திரத்தை பயன்படுத்தவும், அது தொடர்பான பயிற்சியையும் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்த திட்டத்தில் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அருகில் இருந்து பொது சேவை மையத்திற்கு தேவையான ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் உள்ள தேவையான விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, அதற்கான நகல் மற்றும் விண்ணப்ப எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும். இலவச தையல் இயந்திரம் பெற குடும்ப வருமான நகல், ஆதார், பான் கார்டு, தையல் முடித்ததற்கான சான்றிதழ், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றுகள் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.


